பக்கங்கள்

புதிய விடியல் - பகுதி 2


புலர்ந்தது மற்றுமொரு அழகான காலைப்பொழுது. அருமையாய் அழகாய் தன்னுடைய பணியை தொடங்க அதோ அங்கே வந்துவிட்டான் சூரியன்.தூங்கும் அனைவரையும் தட்டி எழுப்புகிறான் எழுந்திருங்கள் இதோ உங்களுக்கான அடுத்த நாள் இங்கே இனிதாய் இனிமையாய் , என்னை போல் நீங்களும் உங்கள் கடமையை செய்ய செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்லி செல்கிறான் அனைவரிடத்திலும்.

அந்த குடிசையில்அந்த சூரியன் வந்து சொல்லும் முன்பே எழுந்து பணியை தொடங்கி விட்டனர் பொன்னியும் வளவனும். செல்வி வெளியில் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தாள் அழகாய். வளவன் காலையிலேயே இஸ்திரி வேலையை தொடங்கி விட்டான் அப்பொழுதுதான் வெயில் உரைக்கும் முன் இந்த சூட்டிலிருந்து வெளியே வர முடியும். பண்ணையார் வீட்டு துணிகளை அவன் இஸ்திரி செய்து கொண்டிருந்தான்.

அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் செல்வியும் நிதானமாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள். " ஏம்மா செல்வி, நா இந்த துணிகள இஸ்திரி போட்டு வெய்க்கறேன் நீ கால சாப்பாட்டுக்கு அப்புறம் இத கொண்டு பொய் பண்ணையாரம்மாட கொடுத்துட்டு வந்துரயா மா" என்றான் வளவன். செல்வியும் சரி என்று உரைத்து விட்டு தன் பணிகளைத் தொடர்ந்தாள்.
                                                                         
                                                              ***********

அந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு பண்ணையாரின் வீடுதான். அந்த வீட்டின் பெரிய காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றால் அதன் ஒரு புறம் மிக நீளமான மாட்டு கொட்டகை அதனை ஒட்டினாற்போல் உள்ள குதிரை லாயத்தில் இரண்டு குதிரைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த பக்கமாக மாட்டு வண்டி முதல் இந்த காலத்து புதிய ரக கார் வரை வரிசை கட்டி நின்றன.அந்தப் பெரிய பங்களாவினுள் பண்ணையாரம்மா அதட்டி அதட்டி வேலைக்காரர்களிடம் வேலை வாங்கி கொண்டிருக்கும் சத்தம் வெளி வரை கேட்டது .

பண்ணையார் வெளியே சாய்வு நாற்காலியில் வெற்றிலை பாக்கு பெட்டியுடன் அமர்ந்து கொண்டிருந்தார். அவரருகே கணக்கு பிள்ளை பவ்யமாய் நின்று கொண்டிருந்தார்.கணக்கு பிள்ளை தலையை சொறிந்தவாறே பேச்சை ஆரம்பித்தார்" அய்யா உங்க கிட்ட ஒரு சமாசாரம் சொல்லனும்னு" என்று மெதுவாய் இழுத்தார். " என்னய்யா கணக்கு ரொம்பவும் இழுக்கறே என்ன விஷயம் சட்டு புட்டுன்னு சொல்லு" என்றார் பண்ணை.

" அய்யா அது வேற ஒன்னும் இல்லீங்க. விஷயம் நம்ம தம்பி சேதுபதிய பத்தி தானுங்கஅதுதா கொஞ்சம் ரோசன பின்ன ஒன்னும் இல்லீங்க" என்று இழுத்து இழுத்து கொஞ்சம் பயத்துடன் சொல்லி முடித்தார். தனது மகனை பற்றி கணக்கு பிள்ளை சொல்வதாய் தொடங்கிய உடனே பண்ணையாரின் முகம் கருத்தது.அவரின் முக மாற்றம் கணக்கு பிள்ளையும் கொஞ்சம் பயமுறுத்தியது.

யோசனையாய் வெற்றிலையை மென்றவாறே கேட்டார் " என்ன விஷயம் கணக்கு இழுக்காம சொல்லு" " அய்யா நம்ம தம்பி அரசாங்கத்துக்கு கொடுக்குற பணம் வர வர அதிகமாயிட்டே போகுது..... அதுனால தினமும் நெறைய பிரச்சனைகள், நிதமும் யாராச்சும் ஒருத்தவங்க ஏதாச்சும் பிரச்சனைய சொல்லிட்டு வந்துகிட்டே இருகாங்க.. நீங்க பாத்து எதாச்சும் செய்யணும் சடுதியா அதுதா.. உங்க காதுல போட்டு வெப்பமேனு...." என்று இழுத்து முடித்தார் கணக்கு." அரசாங்கத்துக்கு கொடுக்கறதா? " புரியாமல் கேட்டார் பண்ணை. " அதுதான் யா டாஸ்மாக், குடிகறதுக்குனு செலவு பன்றததா அப்படி பூடகமா சொன்னேன்" என்றார் பண்ணை.

" அதுதான் ஊர் பூரா பரவி மானம்கெட்டு கெடக்குதே இதுல என்ன பூடகம் வேண்டி கெடக்குது" கோவத்துடன் முணுமுணுத்தார் பண்ணை. " இந்த கருமம் புடிச்சவன் எத்தன வாட்டிசொன்னாலும் கேக்க மாட்டேன்குறான். ஒத்த பிள்ளைனு சொல்லி செல்லம் குடுத்து கெடுத்து வெச்சுருக்கா அவ அம்மா. கட்டிக் காத்த ஜமீன் மானம் மறுவாத எல்லாம் போச்சு. ஏயா கணக்கு இந்த மருந்து மாத்திர ஏதோ இருக்காமே அத கொடுத்தா இந்த சனியனை கையால கூட தொட மாட்டாங்கலாமா கொஞ்சம் விசாரிச்சு பாருயா" என்று சொல்லிவிட்டு சோர்வுடன் எழுந்து உள்ளே சென்றார்.

ஆள் அரவம் கேட்டு  கணக்கு பிள்ளை திரும்பி பார்த்தார். செல்வி கையில் துணி மூட்டையுடன் வந்து கொண்டிருந்தாள். " யாரு வளவன் மக செல்வியா. துணி கொண்டுவந்தயாக்கும் போ போ உள்ள பண்ணையாரம்மாட்ட கொண்டு போய் கொடு போ" என்று கூறிவிட்டு தோட்டத்து பக்கம் செல்வதற்காய் ஆயத்தமானார்.செல்வியும் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.முன் வீட்டில் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.


பண்ணையாரம்மா உள்ளே இருந்து வந்தவள் செல்வியை பார்த்து அவளருகில் வந்தாள்" என்ன செல்வி சௌக்கியமா. பள்ளிக்கூடம் போலயா. நீ பாடம் எல்லா நல்ல படிப்பயாமே நல்ல மார்க் வாங்குறேன்னு கேள்விபட்டேன். உன் அம்மா வரலையா நீ வந்துருக்க" என்று அடுக்கடுக்காய் கேட்டுக்கொண்டே துணி மூட்டையை பிரித்து பார்த்தவள் ஒரு சிலதை எடுத்து வெளியே வைத்து விட்டு மீதியை மீண்டும் கட்டி "செல்வி இதெல்லா சேதுபதியோடது கொஞ்சம் நீயே கொண்டு பொய் அவன் அறையில வெச்சுடு. மாடிப்படி ஏறுறதுனா எனக்கு படு சிரமம். எல்லா இந்த மூட்டு வலிவந்ததுல இருந்துதா.. மேல போய் வலது பக்கம் ரெண்டாவது அற அவனோடது" என்றவாறே மூட்டையை அவளிடம் அளித்தாள்.

செல்வி படியேறி மேலே சென்றாள் கொஞ்சம் யோசித்து வலது புறம் திரும்பி இரண்டாவது அறையின் முன்னே நின்றாள். கதவு லேசாய் சாத்தப்பட்டு இருந்தது. தயக்கத்துடன் லேசாய் கதவை தட்டினாள் " யாரு ?" என்ற அதட்டல் குரல் கேட்டது. " நான் தேச்ச துணி கொண்டு வந்துருக்கேன் அம்மா உங்க அறைல வைக்க சொன்னங்க" என்று வெளியிலிருந்தே பதிலுரைத்தள் செல்வி. "உள்ளே வா" என்றது குரல். செல்வி மெதுவாய் கதவை திறந்து உள்ளே பார்த்தாள்.உள்ளே ஒரு கையில் மது புட்டியும் இன்னொரு கையில் புகையும் சிகரேட்டுமாய் அமர்ந்திருந்தான் சேதுபதி.

செல்வி வேகமாய் உள்ளே சென்று மேஜையை தேடி உள்ளே இருந்த மேஜையின் மீது துணி மூட்டையை வைத்து விட்டு வெளியேற எத்தனித்தாள். அவள் உள்ளே வந்ததில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த குடி போதையில் இருந்த சேதுபதி அவளைவழி மறித்தான் . "நில்லு". ஒரு நிமிடம் நின்ற செல்வி நிலைமை சரி இல்லை என்பதை உணர்ந்தவளாய் " நா போகணும்" என்று வேகமாய் விலகி நடக்க யத்தனித்தாள். நிதானமில்லா சேதுபதி அவள் கையை பிடித்து இழுக்க நொடியில் வந்த கோவத்தில் பலாரென அவன் கன்னத்தில் அறைந்து அவன் கையை உதறி வெளியே ஓடினால் வீடு நோக்கி.

மாடி வராந்தாவில் ஒரு மூலையில் நின்ற பண்ணையார் இவற்றை எல்லாம் எதேச்சையாக கவனிக்க நேர்ந்தது. மகனின் மீதான ஆத்திரம் எல்லை கடந்தது. இருப்பினும் ஜமீனும் பரம்பரை கௌரவமும் அவரை மகனுக்கு எதிராயும் வெளுப்பவன் மகளின் சார்பாகவும் எதையும் பேச விடாமல் தடுத்தது.


                                                                                                                 (தொடரும் )

-- பிரியா


முதல் பகுதியைப் படிக்க (Part 1)

http://wordsofpriya.blogspot.in/2013/06/1.html

இறுதி பகுதியைப் படிக்க (Last Part)

http://wordsofpriya.blogspot.in/2013/04/blog-post_16.html

4 கருத்துகள்:

  1. அவனை வீதியில் இழுத்து செருப்பெடுத்து அடித்திருக்க வேண்டும்...

    ...ம்... அடுத்து என்ன நடக்கும்...? ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதி பகுதியை இங்கே கிளிக்கினால் படிக்கலாம் சார்...

      http://wordsofpriya.blogspot.in/2013/04/blog-post_16.html

      நீக்கு
  2. அரசாங்கத்துக்கு வருமானம் தர்றாரா..‘! கிராமத்து ஜனங்களுக்கேயுரிய கிண்டலும் கேலியுமான பேச்சை ரசிக்க முடிந்தது. பணம் நிறைய இருந்து விட்டால் அது தரும் தைரியத்தில் எப்படியும் நடந்து கொள்ள வைக்கிறது. செல்வி அவனை அறைந்ததில் தப்பேயில்லை... அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள். இப்போதே இறுதிப் பகுதிக்கு ஓடுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூடகமாக விடயங்களை பேசுவதில் கிராமத்து மனிதர்களின் பானியே தனி தானே சார்...

      நீக்கு