பக்கங்கள்

கீதா

லிப்ட் இல்லாத அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டாரின் மூன்றாம் தளத்திலிருந்து லிப்ட் வைக்காத முதலாளியை சபித்துக் கொண்டே வரும்போதுதான் மூன்றாவது இரண்டாவது தளங்களுக்கு மத்தியில் அனுவை  சந்திக்க நேர்ந்தது.நாங்கள் இருவரும் பள்ளித் தோழிகள். நீண்ட நாட்களின் பிறகு எதிர்பாராமல் சந்தித்து கொண்டதில் இருவரின் முகத்திலுமே அத்தனை மகிழ்ச்சி.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பின் கீழ்த்தளத்தின் உணவுப் பகுதியில் எங்கள் அரட்டை தொடர்ந்தது. பேச்சு பல கட்டங்களைத் தாண்டி எங்கள் பள்ளி வாழ்க்கையைக் குறித்து சென்றது. பள்ளியில் அடித்த லூட்டிகள் எங்கள் நண்பர் கூட்டம் என்று நீண்டு கொண்டே சென்ற பேச்சில் எங்கிருந்தோ நுழைந்தது கீதாவின் நியாபகம்.

கீதாவும் எங்கள் பள்ளித் தோழிதான், மிக நன்றாக படிக்கும் மாணவி. பள்ளி இறுதி ஆண்டில் அவளே அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேறினால்.மேல்நிலைப்  பள்ளியில் அவள் முதல் பிரிவு (கணிதம், உயிரியல் பிரிவு) மாணவி, நாங்கள்  இரண்டாம் பிரிவு (கணிப்பொறி அறிவியல்). இருப்பினும் இரு பிரிவிற்கும் பொறியியல், கணிதம், இயற்பியல் பாடங்கள் கூட்டாக வைத்துதான் நடத்தப்படும், ஆதலால் அவளுக்கும் எங்களுக்கும் நல்ல அறிமுகம் இருந்தது, பின்னர் அது நல்ல நட்பாகவும் மாறியது.

பதினொன்றாம் வகுப்பு பாதி முடிந்திருந்த போதே எங்கள் நட்பு நன்கு பலப்பட்டது, அப்படியே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்தது. கீதாவுக்கு ஒரு தங்கை, படித்துக் கொண்டிருந்தாள், அம்மா  கூலித் தொழிலாளி, அப்பாவிற்க்கு இவர்களை விடுத்து வேறொரு குடும்பம் இருந்தது, அவர் அவர்களுடன்  இருந்தார். இருப்பினும் அவர் பிள்ளைகளை அவ்வப்பொழுது வெளியில் சந்தித்து நலம் விசாரித்து சிறு தொகை  செலவிற்கு கொடுப்பதுண்டு, கீதாவின் குடும்பம் அவள் தாயின் பெற்றோருடன் வசித்து வந்தனர். அவர்களும் கூலி வேலை செய்பவர்களே.

கீதா காலை பள்ளிக்கு வருவதற்குள் அங்கே உள்ள தேங்காய் கலங்களில் அதிகாலையிலேயே சென்று தேங்காய் உடைத்து விட்டு பின்பு பள்ளி வருபவள், அதனால்  எப்பொழுதும்  காலை உணவு சாப்பிட  நேரம் இருக்காது , மதிய உணவும் பல நேரங்களில் இருக்காது . அத்தகைய தருணங்களில் நாங்கள் தோழிகள்  எங்களுடைய உணவை அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களும் உண்டு.

பள்ளி  முடிந்ததும் நாங்கள் அவரவர் விருப்பப்படி அடுத்த அடி எடுத்து வைக்க கீதா அசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தால். அதன் பிறகு சிறிது காலம் எங்களுக்குள் தொடர்பு இல்லை. பின்பு ஒரு முறை கீதாவை கடைவீதியில் சந்திக்க நேர்ந்த பொழுது தான் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து விட்டு ஒரு டுட்டோரியலில் வேலை செய்து கொண்டே  பகுதி நேர கல்லூரியில் இளநிலை கணிதம் படித்துக் கொண்டு இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினால்.

இதுவே அதுவரை எனக்கு தெரிந்த விவரங்கள்.அதன் பிறகு அனு கூறிய விவரங்கள் என் மனதில்  ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டி விட்டன.

கீதாவை  நான் இறுதியாக சந்தித்த பொழுதே அவள் பாட்டியும் அப்பாவும் இறந்து விட்டிருந்தனர். அவள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் அம்மாவும் இறந்து விட, இவர்களுக்கு ஆதரவிற்க்கு யாருமற்ற நிலை. இவள் கல்லூரி முடிந்ததும் ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து பொறுப்பாய் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து அவள் வீட்டின் அருகிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அதிலேயே அவர்களை குடியமர்த்தி தாயின் இடத்திலிருந்து தங்கைக்கு வளைகாப்பும் நடத்தியிருக்கிறாள்.  இந்த விவரங்கள் அனைத்தும் அனு  கீதாவை சந்தித்த பொழுது அவள் கூறியவை. அப்பொழுது கீதாவிடம் அவள் திருமணம் குறித்து கேட்க சிரிப்பு மட்டுமே விடையாக வந்துள்ளது .

எப்பொழுதுமே கீதாவின் பண்பும் அறிவும் எங்களுக்கு வியப்பைத் தருபவை. ஆனால் அனைத்தையும் தாண்டி இந்த சிறு வயதில் அவளுக்கிருந்த பொறுப்புணர்வும், தங்கையின் மீதான அவள் தாயன்பும் மனதை ஏதோ செய்தது.

"அக்கா என்பவள் இன்னொரு அம்மா" என்ற சொலவடைதான் எவ்வளவு உண்மை. இவளைப்  போல் தாயுமாயும் தந்தையுமாயும் அமையும் அக்காக்கள் எத்தனை பேருக்கு அமைவர். சிந்தனையிலேயே கழிந்தது பொழுது .