பக்கங்கள்

வெல்வோம் வா




இருளும் ஒளியும்
இணைகின்ற காலமதில்
வெளிச்சத்தை பிடித்து
நிறுத்திடும் முயற்சியிது

நிலமென்ன கடலென்ன
எங்கும் வெல்லலாம்
வித்தியாசங்கள் ஏதுமில்லை
உயர்வொன்றே குறிக்கோளாய்

துள்ளட்டும் கால்கள்
துயரங்கள் நீங்கி
நீளட்டும் கைகள்
நீலவானையும் தாண்டி

தகிக்கும் ஆதவனோ
குளிரும் மாலையோ
என்னதான் செய்திடும்
எம்மான் உன்னை

உறுதி கொண்ட
உள்ளமது - உனக்கென
வாய்த்திருக்கும் வரையில்
தடைகளென்று ஏதுமில்லை...
வாழ்வோம் வா!



---பிரியா 


குறிப்பு : இது சித்திரம் பேசுதடி முகநூல் பக்கத்திற்காக எழுதிய கவிதை

சிதறல் - 10


கணப்பொழுதுகள்
-------------------------

அலைகளின்
ஒலியின் வழியே
நீந்திச் செல்கிறது - வாழ்க்கை
சில பயணங்களில்


                          ----X----


நானாகிய....
--------------

அனைவரையும் காட்டும்
முகவரிக் குறிப்பேட்டில்
தேடித்தேடி சலிக்கிறேன்
தொலைத்துவிட்ட
என்னை


                          ----X----


யாதுமாகி

-----------------

ஏதுமற்ற நாட்களில்
எல்லாமுமாய் ஆகிறது
பல நேரங்களில்
உன் நினைவுகள்

                          ----X----


வழிகாட்டி
--------------

சகுனங்கள் ஏதுமற்ற
இருட்டின்
காலடித்தடத்தின் வழியே
அழைத்துச் செல்கிறது
நம்பிக்கையின் ஒளிக்கீற்று



-- பிரியா