பக்கங்கள்

நூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை (Animal Farm)

நூலின் பெயர் : விலங்கு பண்ணை 
மூலம் : ஆங்கிலம் (Animal  Farm)
எழுத்தாளர் : ஜார்ஜ் ஆர்வெல் 
தமிழில் : பி.வி. ராமசாமி 
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் 

மேலோட்டமாக பார்க்கையில் இது ஒரு சாதாரண பண்ணையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர்களுக்கான புத்தகம் போன்று தோன்றினாலும் சற்று கம்யூனிச ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டால் இதன் ஆழம் புரியும். 1945-ல் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் இது.


ஒரு பண்ணையில் பண்ணை வேலைக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் வளர்க்கப்படும் பன்றி, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, காகம் போன்ற பண்ணை மிருகங்களும், பறவைகளும் எஜமானர் தங்களுக்கு  இழைக்கும் அநீதியை எதிர்த்து ஒரு புரட்சியின் மூலம் தாங்கள் விடுதலை பெற வேண்டும் என்று திட்டமிடுகின்றன. 





சரியான அளவு தீவனம் மற்றும் ஓய்வு வழங்கப்படாதது , கோழிகளின் முட்டைகளை முழுவதுமாக சந்தைக்கு அனுப்பி விடுவது, இளம் பன்றிகளும் ஆடுகளும் இறைச்சிக்கு விற்கப்படுவது, மாடுகளின் பால் கன்றுகளுக்கு வழங்கப்படாமல் வெளி சந்தையில் விற்கப்படுவது இதுவே அவைகளின் வெறுப்புக்குக் காரணம். 

ஒரு நாள் விலங்குகளில், வயதில் மூத்த ஓல்ட் மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி அனைவரையும் தான் கண்ட ஒரு கனவு குறித்து கூற இருப்பதாகக்  கூறி அழைக்கிறது . அனைத்து விலங்குகளும் இரவில் எஜமானருக்குத்  தெரியாமல்  ஒன்று கூடுகின்றன. கூட்டத்தில் ஓல்ட் மேஜர் தான் கண்ட கனவில் இங்கிலாந்தில் புரட்சி வெடித்ததாகவும் இங்கிலாந்து முழுவதிலும் பண்ணைகள் மனிதர்களின்  வசமிருந்தது முழுவதுமாக விலங்குகளின் வசம் வந்ததாகவும் மனிதர்களின் காலடியே படாத சொர்க்க பூமியாக இங்கிலாந்து மாறி விட்டதாகவும் கூறியது.

இதன் மூலம் விலங்குகளின் மனதில் புரட்சிக்கான விதையையும் தூவிவிட்டு தனக்கு தன் முன்னோர்கள் கற்று தந்ததாகக்  கூறி இங்கிலாந்தின் விலங்கினமே என்ற பாடலையும் அனைவருக்கும் கற்றுக்  கொடுக்கிறது. இது நடந்து சிறிது நாட்கள் கழித்து அந்த வெள்ளை பன்றி வயோதிகத்தின் காரணமாக இறந்தும் விடுகின்றது. பின்னர் சிறிது நாட்கள் கழித்து   எதிர்பாராத விதமாக எதிர்பாராத  நேரத்தில் நடந்த ஒரு புரட்சியின் மூலம் பண்ணையை எஜமானரிடமிருந்து பறித்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து  விரட்டி விட்டு விலங்குகள்  பண்ணையைக் கைப்பற்றி  தாங்களே நிர்வகிக்கத்  தொடங்குகின்றன. 



முதலில் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது அங்குள்ள விலங்குகளில் அதிகம் புத்தி கூர்மை உள்ள விலங்குகளாக அறியப்பட்ட பன்றிகளிடம் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படுகின்றது. பண்ணையின் பெயர் "மேனார் பண்ணை " என்பதிலிருந்து  "விலங்குப்  பண்ணை" என்று மாற்றப்படுகிறது.ஸ்நோபால், நெப்போலியன் என்ற இரண்டு  பன்றிகளும் நிர்வாகப்  பொறுப்பை ஏற்று நடத்துகின்றன. 

விலங்கு பண்ணைக்கான ஒழுங்கு விதியாக சில கட்டளைகள் வகுக்கப்பட்டு அவை 7 கட்டளைகளாக அனைவரின் கண்ணிலும் படும் விதமாக அங்குள்ள உயரமான சுவற்றில் எழுதப்படுகிறது.(இடைப்பட்ட காலத்தில் பண்ணை வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எஜமானரின் குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்களைப் பயன்படுத்தி பன்றிகள் எழுதப் படிக்க கற்றுக் கொண்டன). ஒவ்வொரு ஞாயிறன்றும் கூட்டம் கூட்டப்பட்டு பண்ணைக்குத் தேவையான தீர்மானங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. கூட்ட இறுதியில் கொடி ஏற்றப்பட்டு 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் பாடப்படுகிறது.



சில நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து அக்கம் பக்கம் பண்ணைகளில் விலங்குப் பண்ணையின் புகழ் பரவத் தொடங்குகிறது.  ஸ்நோபால்  நிறைய நல்ல திட்டங்களைத் தொடங்க தீர்மானங்கள் கொண்டு வருகிறது . விலங்குகளுக்கு எழுத படிக்கக்  கற்றுக் கொடுப்பது, பண்ணையில் காற்றாலை தொடங்குவது போன்றவை இதில் அடங்கும். ஆனால் நெப்போலியனுக்கும் ஸ்நோபாலுக்கும்  ஒற்றுமை என்பது சிறிதும் இல்லை. இதனிடையில் மேனார் பண்ணையின் உரிமையாளர்  சில ஆட்களைத் திரட்டிக் கொண்டு பண்ணையைத் தாக்க வருகிறார். இறுதியில் விலங்குகளால் வெற்றியடையப்பட்ட "மாட்டுத் தொழுவ யுத்தம்" என்று பெயரிடப்பட்ட அந்த யுத்தத்தில் ஸ்நோபால் சிறப்பாகச் செயல்பட்டதற்காக அதற்கு 'விலங்கு நாயகன் முதல் வரிசை' என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.



 இதன் பிறகு காற்றாலை விவகாரத்தில்  வேற்றுமை வெடித்து ஸ்நோபால் நெப்போலியனால் பண்ணையை விட்டே விரட்டப்படுகிறது.
இது நடந்த பிறகு நெப்போலியனின் நடவடிக்கையில் மாற்றம் வரத் தொடங்குகிறது. சிறிது சிறிதாக தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி சர்வாதிகாரியாக மாறுகிறது. சுவற்றில் எழுதப்பட்ட 7 கட்டளைகளும் மீறப்படுகின்றன. பண்ணையில் பன்றிகளையும் நாய்களையும் தவிர மற்ற 
விலங்குகள் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றன. முந்தைய எஜமானரிடம் இருந்ததை விட விலங்குகளின் நிலை இன்னும் மோசமாகிறது. 

இதனையடுத்து 'காற்றாழை யுத்தம்' என்ற இரண்டாவது யுத்தம் பக்கத்து பண்ணையாளருடன் நடக்கிறது இதில் விலங்குகள் வென்றாலும் பல விலங்குகள் பலத்த காயமடைகின்றன.  ஆனால் தாங்கள் விலங்குப் பண்ணையின் அங்கத்தினர், மனிதர்களின் அடிமை இல்லை என்ற எண்ணம் அந்த விலங்குகளை அனைத்து துயரங்களையும் தாங்கிக் கொள்ளச் செய்கிறது. ஆனால் சிறிது சிறிதாக மாறிய நெப்போலியன் இறுதியில் அனைத்து வகைகளிலும் மனிதனைப் போலவே நடந்து கொள்கிறது. 

பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்குகிறது. கோழிகளின் முட்டைகள் விற்கப்படுகின்றன. விலங்குகளுக்கு ஒய்வு பெரும் வயது அறிவிக்கப்பட்டு அவைகளுக்கு ஒய்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு காற்றில் விடப்படுகிறது. அதிகமாக வழங்கப்படுவதாக சொல்லப்பட்ட தீவனத்தின் அளவும் முன்பை விட குறைக்கப்படுகிறது. ஆனால் பன்றிகளுக்கான தீவனம் மட்டும் அதிகரிக்கப்பட்டு அவைகள் கொழுத்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில் பன்றிகள் இரண்டு கால்களால் நடக்கவும் மனிதர்களைப் போல மது அருந்தவும் கூட கற்றுக் கொள்கின்றன.பார்லி அதிகம் பயிரிடப்பட்டு பண்ணை  வீட்டின் ஒரு பகுதியில் பியர் காய்ச்சப்படுகிறது.

இறுதிப் பகுதியில் ஒரு நாள் பண்ணையில் பக்கத்து பண்ணைகாரர்களுக்காக சிறப்பான விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த விருந்து நிகழ்ச்சியினை அறையின் வெளியிலிருந்து ஜன்னலின் வழியாக  மறைந்து நின்று காணும் அனைத்து விலங்குகளும், பன்றிகள் முற்றிலும் மனிதர்களைப் போல நடந்து கொள்வதைப் பார்த்தும் அவைகளின் முகம் சிறிது சிறிதாக மனிதர்களைப் போல மாறுவதைக் கண்டும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன......



கதைக்கு என் புரிதல்:
புரட்சிகள் எத்தனை வந்தாலும் போனாலும் அடி மட்ட மக்களின் நிலை என்பது எப்போதும் ஒன்று போலவே இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை எப்போழுதும் இக்கரைக்கு  அக்கரை பச்சை அத்தனையே. கரங்கள் மட்டுமே மாறுகின்றன அதன் உள் இருக்கும் பொருட்கள் எப்பொழுதுமே சுழட்டப்படும் சாட்டைகள் தாம். தலைவர்கள் மாறுவதிலும் சில வார்த்தை மாயங்களிலும்  நம்மை தொலைத்து கொண்டே இருக்கிறோம் காலங்கள்  தோறும். அதைத்தவிர வேறு வாழ்வியல் மாற்றங்கள் என்பது எப்பொழுதும் ஒரு கேள்விக் குறியே.  


--பிரியா   

சிதறல் - 18

பூக்கள்
======
பச்சைப் புல்வெளியில்
சிதறிக் கிடக்கின்றன
பூக்கள் - என் மனதின்
எண்ணங்களைப் போலவே
எத்தனை முயற்சித்தும்
முடியவே இல்லை
ஒரு நிலைப்படுத்த....