பக்கங்கள்

வெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்

வெற்று அறிவிப்புகள்
ஓங்கி ஓங்கி ஒலிக்கின்றன
எங்கேனும் வெள்ளம் பாதித்த
எங்கேனும் கட்டிடம் இடிந்த
எங்கேனும் தீ பிடித்த
ஒவ்வொரு காலையிலும்

நான் இதுவே

எனக்கான காற்று 
எனக்கான மழை
எனக்கான நிலம்
எனக்கான வாழ்க்கை 
எனக்கான என்னுடையவைகள் 
இவைகளை மட்டுமே - நான் 
எனதுடைமை என்கிறேன்

நடந்தேறா முயற்சி

சிறிது நாட்களாக
சில நினைவுகளை
அழிக்கும் முயற்ச்சியில்
ஈடுபட்டுள்ளேன்
தீவிரமாக

ஒரு கரும்பலகையை
சுத்தம் செய்வதுபோல் - அது
அத்தனை சுலபமாய்
இருப்பதில்லை

பாத்திரத்தில் வடித்த
எழுத்துக்களைப் போல் -
அவைகளின் ஆழம்
கொஞ்சம் அதிகம்

நீக்க நினைக்கையில்
நிச்சயம் எச்சங்களை
விட்டே செல்லும்
கீறல்களாக

இருப்பினும் ஏதேனும்
ஒரு வகையில் அத்தனையும்
அழித்தொழிக்க முயல்கிறேன்

சேதாரங்கள் மட்டும்
சற்றே குறைவாக
இருக்கும்படி




--பிரியா

சிலை அமைக்க 200 பெண்களுக்கு 150

மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - பெண்கள் பாதுகாப்புக்காக 150 கோடியும்  சர்தார் பட்டேலின் சிலையை குஜராத்தில் நிறுவ 200 கோடியும் ஒதுக்கீடு


வறுமை எழுத்தறிவின்மை சுகாதாரம் போன்ற ராட்சதப் பிரச்சினைகள் இன்னும் நீங்கப்  பெறாத சுதந்திர இந்தியாவில், இவை அனைத்தையும் விட தற்பெருமைக்காக 2500 கோடி ரூபாய் செலவு செய்து  கட்டப்படும் ஒரு சிலைக்கு இந்திய மத்திய அரசாங்கம் சுலபமாய் 200 கோடிரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் அதுவே இச்சமூகத்தின் சரி பாதியாய் நித்தம் நித்தம் ஏதேனும் ஒரு வகைப் பிரச்சினையில் ஆட்பட்டு வாழும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு இவர்களால் ஒதுக்க முடிந்தது வெறும் 150 கோடி மட்டுமே. பாவம் இவர்களின் வறுமை கூட பாரபட்சமானது போல. 

இதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது இந்திய அரசு?.  பெண்களின் பாதுகாப்பு என்பது இந்த அரசாங்கத்திற்க்கு அத்தனை பெரிய விசயமாக படவில்லையா? இல்லை இந்த இந்திய சமூகத்தில் பெண்கள் அத்தனை அதிக பாதுகாப்பாக வாழ்கிறார்களா? எப்பொழுதும் தொலை நோக்கிகளை கையில் வைத்துக் கொண்டு கனவுலகில் வாழும் இந்த அரசாங்கத்திற்கு நிஜம் அத்தனை சீக்கிரம் புரியாதுதான்.  ஆனால் என்ன செய்ய எங்கள் கைகளில் தொலை நோக்கிகளும் இல்லை,  இவர்களைக் குறித்தான கனவுகளும் இல்லை, எங்கள் வெற்று கண்களுக்கு நிகழ்காலம் அத்தனை அப்பட்டமாய் தெரிகிறதே.



தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் தான் அதில்  நிச்சயம் மாற்றுக் கருத்தென்பதே கிடையாதுதான். ஆயினும் போராடி வாழ்ந்து மறைந்த தேசத்தலைவர்களுக்கு  ஆடம்பர சிலை அமைப்பதைக் காட்டிலும் நித்தம் நித்தம் போராட்டத்துடன் வாழும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் மிகவும் அவசியம். இதை அந்த தலைவர்களின் ஆன்மாவும் கூட உறுதியாய் ஒத்துக்கொள்ளும்(நீங்கள் கேட்டுப் பார்த்தால்). உங்கள் சிலை அமைப்பின் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கலாம். ஆனால் அதில் எங்கள் நலனைப் புறக்கணிக்காதீர்கள். நாட்டு மக்கள் உங்களுக்கு வாக்களித்தது நிச்சயம் சிலைகளை மட்டுமே அமைக்க அல்ல.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த இந்திய வாக்காளர்களில் பெண்களும் உள்ளனர்  என்பதை மோடி அரசாங்கம் மறந்து விட்டது போலும். இவர்களால் தங்களுக்கு ஏதேனும் ஒரு நல்லது நடக்கும்  என்ற எண்ணத்தில்தான் இந்த பெண்கள் வாக்களித்திருந்தனர். அந்த வாக்காளர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி  நல்லதொரு பரிசை அளித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அனைவருக்கும். இது போன்றதொரு நல்லாட்சியை எதிர் பார்த்துதானே வாககளித்தீர்கள் அனைவரும்???

உங்களில் யாரேனும் கேள்வி கேட்கலாம் இருக்கும் நிதி நிலைமையில் 150 கோடியாவது ஒத்துக்கினார்களே என்று, அதே நிதி நிலையிலிருந்துதான் சிலையமைக்க இந்த 200 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் மட்டும்தான் மத்திய அரசு இப்படி செய்தது என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னுமொரு பிரச்சினையும் உண்டு மிகப்பெரிய திட்டங்களான லக்னோ அகமதாபாத் மெட்ரோ திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை............................................. வெறும் 100 கோடி மட்டுமே. வாழ்க நமோ அரசாங்கம்


-- பிரியா 

சிதறல் - 13

பயணங்கள்
-----------------
தனிமையுடன் கூடிய
நெடுந்தூரப் பயணங்கள்
முற்றுப்பெறுகின்றன
சிறந்ததொரு பொழுதில்
எனக்கான அறையின்
இறுதித் தனிமையில்