பக்கங்கள்

இப்படியாக மனிதர்கள் - 3

பாகம் - 3 (இறுதி பகுதி)

முகிலனின் அருகில் நின்றிருந்த பாட்டி " அட பாவமே வயசான மனுஷன் பசியில கெடக்கும் போலயே" என்று பரிதாப பட்டவாறே அந்த பெரியவரை கூவி அழைத்தார் " இந்தா பெரியவரே  இங்க வாங்க " பாட்டியின் அழைப்பை ஏற்று அவரும் ரோட்டைக் கடந்து வந்தார்.

ஒடுங்கிய கண்களும் அதில் வயிற்றின் பசியும் அப்பட்டமாய் தெரிந்தது." என்ன பசிக்குதா?" எதுவும் சொல்லாமல் பெரியவர் தலை குனிந்து நின்றார். பாட்டி புரிந்தவராய் உள்ளே சென்று டீயும் இரண்டு பண்ணும் கொண்டு வந்து அவர் முன்னே வைத்தார்.

பெரியவர் அவைகளை சில நொடிகள் பார்த்து கொண்டிருந்துவிட்டு வேக வேகமாய் பண்ணை பிய்த்துத் தின்னத் தொடங்கினார். இதை பார்த்து கொண்டிருந்த தாத்தா உள்ளிருந்து இன்னுமொரு கட்டு பிஸ்கட்டையும் கொண்டு வந்து அவரருகில் வைத்தார். லேசாய் நிமிர்ந்து பார்த்து விட்டு அந்த பெரியவர் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து டீயில் தொட்டு சாப்பிட தொடங்கினார். அவர் சாப்பிடும் வரை அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர் மூவரும். சாப்பிட்டு முடித்து டீயும் குடித்து முடித்தபின் பெரியவர் நிமிர்ந்து இருவரையும் பார்த்து நன்றியுடன் கை கூப்பினார்.

பின்பு அங்கிருந்து செல்வதற்காக எழுந்தார். அப்பொழுது முகிலன் ஏதோ நினைத்தவனாக" அய்யா கொஞ்சம் நில்லுங்க" என்று பெரியவரை அழைத்தான்.அவர் நின்று பார்க்க " என்னுடன் வாங்க" என்று அவரை தனது கடைக்குள் அழைத்து சென்றான். அவரை முடி வெட்டும் சேரில் அமர சொன்னான். பெரியவர் ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தார்.

 " வாங்க அய்யா உக்காருங்க யோசிக்காதிங்க என்று மீண்டும் அழைத்தான்" இம்முறை பெரியவர் சேரில் சென்று தயக்கத்துடன் அமர, முகிலன் அவரை சேரில் நன்கு இருத்தி மளமளவென்று அவருடைய முடியை திருத்த தொடங்கினான். சிறிது நேரத்தில் பெரியவர் தோற்றத்தில் நல்ல மாறுதல் முகிலனால் வந்தது. கடையில் இருந்த கானாடியில் முதியவர் தன முகத்தை பார்த்தார் அவரின்  முகத்தில் ஒரு புன்னகை  படர்ந்தது. மாறாத புன்னகையுடன் முகிலனை திரும்பி பார்த்தார்.

முகிலன் அவரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.  கடையின் அருகே இருந்த தண்ணி பைப்பில் சென்று ஒரு குடத்தில் தண்ணீர் பிடித்து வந்தான் கடையில் இருந்த சோப்பு கட்டியை எடுத்து கொண்டு பெரியவரை கடையின் பின்னால் வருமாறு அழைத்தான். பெரியவர் தயங்கி நிற்க " ஒண்ணுமில்ல வாங்க" என்று அழைத்தான். பெரியவரும் பின்னர் எதோ நினைத்தவராக அவன் பின்னால் எழுந்து சென்றார்.

சிறிது நேரம் கழித்து வந்த முகிலன் கடையில் இருந்த தன்னுடைய பழைய வேட்டியையும் சட்டையும் எடுத்து சென்றான்.பாட்டியும் தாத்தாவும் இவற்றையெல்லாம்  பார்த்து கொண்டு நிற்க சற்று நேரத்தில் முதியவர் கடையின் பின்னாலிருந்து பளிச்சென்று வந்தார், அவருடனே முகிலனும். பெரியவர் அங்கு நின்று கொண்டிருந்த தாத்தா பாட்டி இருவரையும் ஒரு பெருமிதத்துடன் பார்த்தார். முகிலனையும் அவர்கள் இருவரையும் அவர் பார்த்த பொழுது அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை நன்றி உணர்ச்சியுடன் சேர்ந்து வந்தது. வார்த்தைகள் உதிக்காத பல விடயங்களை அந்த பார்வையும் புன்னகையும்  உணர்த்தி சென்றது.


(முற்றும்)



( முதல் பாகத்தினை இங்கேயும்   இரண்டாம் பாகத்தினை இங்கேயும் படிக்கலாம்)


--பிரியா

6 கருத்துகள்:

  1. மனிதம் இன்னும் எஞ்சியிருக்கிறது என்பதை உணர்ந்து மகிழ்ச்சி கொள்ள வைத்தது முடிவு. முகிலன் போன்றவர்கள் அவசியத் தேவை இனறு. அனுபவப் பொக்கிஷங்களாய் இருக்கும் முதியோரின் அருமை உணராத இளைய தலைமுறையினருக்கு உணர்த்த இதுபோன்ற கதைகளும் தேவைதான். கதை சொல்கிற கலையில நல்ல முன்னேற்றம் ப்ரியாகிட்ட. மகிழ்வான வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்... எல்லாரும் சொல்ற கருத்துக்களை ஏத்துகிட்டு எழுதி வருகிறேன் ...இரண்டாவது கதையிலேயே கிடைத்த வரவேற்ப்பு பிரமிப்பளிக்கிறது அது என்னுடைய பொறுப்பை இன்னும் அதிக படுத்துகிறது.. வரும் நாட்களில் இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன்...

      நீக்கு
  2. அழகான மனித நேயக் கதை... அழகாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துகள், கதை அருமை.... பெரியவர்களின் மனிதாபிமானமும், முகிலனின் உதவி நெகிழச்செய்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.. :)

      நீக்கு
  3. மிக அருமையான கதை! மனிதம் மரித்துவிடவில்லை! என்பதை அழகாக பகிர்ந்தீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு